பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.
இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,
சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது
தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்
தான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.
சமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.
வெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த
சின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்
கொள்வார்கள். இது வெறும் அடையாளச் சின்னம் மட்டும் தானா?. மேலே
படியுங்கள்.
மங்கள சின்னங்கள்
சமண ஆகமங்கள் கூறும் மங்கள சின்னங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மங்கலச் சின்னங்கள் வருமாறு.
“மங்களகாரக வஸ்தூனாம் ததி தூர்வா அட்சத
சந்தன நாளிகேர பூர்ணகலச ஸ்வஸ்திக தர்பண
பத்ராசன வர்த்தமான மத்ஸ்யயுகள ஸ்ரீவத்ஸ
நந்தியா வர்த்தா தீனாம் மத்யே ப்ரதமம் முக்யம் மங்களம்.
ஸ்வஸ்திகம் – தத்துவ விளக்கம்
ஸ்வஸ்திகம் – ஜிநதர்மஸ்வரூபம். ஆங்கிலத்தில் “Swasthik – a symbolic
representation of Jina Dharma” என்று சொல்லலாம். ஸ்வஸ்திகத்தைப்
பார்க்கும் போது உயிரின் நோக்கம் தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் சமண
பெரியார்களால் (ஆச்சாரியர்கள்) அமைக்கப்பட்டது தான் இந்த ஸ்வஸ்திக்.
இச்சின்னத்தில் உள்ள ஒவ்வொரு கோடுகளும், புள்ளிகளும் உள்ளார்த்தம்
கொண்டவை. உயிரின் நோக்கத்தைக் காட்டுபவை.
a. ---- (Long Base Line) இந்தக் கோடு இல்லறத்தைக் குறிக்கும்.
சமணம், மக்களுக்கு இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்களை
வகுத்திருக்கிறது. மக்கள் தங்கள் நிலைமைக்கேற்ப ஏதாவதொன்றை
ஏற்று வாழலாம். முதலில் இல்லறம் ஏற்று, ஆண்டு அனுபவித்து,
நல்லறம் நடாத்தி, பக்குவம் பெற்ற பின்னர், துறவறம் ஏற்கலாம்.
(சீவக நம்பியின் கதையே இதற்கு சாட்சி).
b. | (Long straight Line) இந்தக் கோடு துறவறத்தைக் குறிக்கும்.
இல்லறம் ஏற்று பின் துறவறமும் ஏற்கலாம் அல்லது நேரே துறவறமும்
ஏற்கலாம். நேரே துறவறம் ஏற்றவர்கள், சில காரணங்களால், மீண்டும்
இல்லறம் ஏற்று, அக்காரணங்கள் முடிந்த பின் துறவறத்திற்கும் மாறலாம்.
(இதற்கு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சாரியர் பூஜ்யபாதரின்
வாழ்க்கையே சாட்சி).
c. – (Short Lines) இந்நான்குக் கோடுகள் பிறவியின் சுழற்சியைக்
குறிக்கும். இச்சுழற்சியை மேருமந்தரப் புராண ஆசிரியர் “மாற்றில் சுழற்சி2”
என்று வர்ணிக்கிறார். உயிரானது தன் வினைப்பயனால், ஒவ்வொரு
பிறவியாக பிறந்து, பிறவிச் சுழற்சியில் உழன்றுக் கொண்டிருக்கும்.
நல்வினைக் (காதி வினை) கட்டால் தேவ, மனித கதியிலும், தீவினைக்
(அகாதி வினை) கட்டால் மிருக, நரக கதிகளிலும் சுழன்றுக்
கொண்டிருக்கும்.
d. . (Three Dots) இவைகள் மும்மணி3களைக் குறிக்கும். நான்கு
கதிகளிலும், சுழலும் பிறவியானது, இந்த மூன்று மணிகளைக்
கடைப்பிடித்தால் இந்த பிறவியில் இருந்து விடுபடலாம். மும்மணிகள்,
வடமொழியில் இரத்தனத்திரயம் என்று அழைக்கப்படும். இந்த புள்ளிகள்
முறையே நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்றழைக்கப்படுகிறது.
பிறவியில் இருந்து விடுபட நினைக்கும் உயிர்களுக்கு அருமருந்தாகத்
திகழ்வது இம்மும்மணிகள். (மும்மணிப் பற்றியறிய என்னுடைய
மும்மணிகள் கட்டுரையைப் படிக்கவும்)
e.
(Crescent) இப்பிறை வடிவம் சித்தசிலா என்னும் வீட்டுயிர்கள் தங்கும் இடத்தின்
குறியீடு. அஃதாவது, பிறவியானது, மும்மணிகளைக் கைக்கொள்வதன் மூலம்
பிறவிச் சுழற்சியிலிருந்து விடுப்பட்டு, இருவினையுங் நீங்கி மூன்று உலகத்தின்
உச்சி4 என்றழைக்கப்படும் சித்தசிலா அல்லது சிலாதலம் என்றழைக்கப்படும்
இடத்தில் சென்று பேரின்பானந்தந்தில் திளைக்கும். அவ்வாறு வீட்டு பேறடைந்த
(சிவகதி) உயிர்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை. சித்தசிலா பற்றியறிய
என்னுடையக் கட்டுரையைப் படிக்கவும்.
f. . (Single Dot) இந்தப் புள்ளி வீடுபேறடைந்த உயிரைக் குறிக்கும்.
சமண இலக்கியங்கள் இவ்வுயிரை சிவகதி5யடைந்த உயிர் என்றழைக்கின்றன.
அவ்வாறு சிலாதலம் சென்றடைந்த உயிர் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.
“பிறவா நெறி” தந்த பண்ணவன் தாளைத் தோனியாகக் கொண்டு, மும்மணி
யென்னும் துடுப்புப் பெற்று, பிறவி என்னும் கடலினை கடப்போம்.
வாரீர், வாரீர்!!
இரா.பானுகுமார்,
சென்னை,
அடிக்குறிப்புகள்:
1. http://jainsquare.com/2011/05/01/24-tirthankars-symbols/
2. கருணையும் அறிவும் உண்டியும் உரையுளும் ஈதல் காமம்
மருளிலா இறைவன் பாதம் சிறப்போடு வணங்கல் மையல்
இருளறத் தெளிதல் வென்றோர்க்கு இறைவனது அறத்தைச் சீலம்
மருவி நின்று ஒழுகல் மாற்றில் சுழற்சி தீர்மருந்தி தென்றார் – மேரு
மந்தர புராணம் – பாடல் – 345
3. ”மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
அப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
இப்பொரு ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபெற் றாரோய்” - சூளாமணி
– பாடல் 201
4. “கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானொர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலினுள் மூழ்கி னானே” – சீவக சிந்தாமணி
– பாடல் – 3117
5. “அணிவரு சிவகதி யாவது இன்பமே” - சூளாமணி
Sunday, April 15, 2012
ஸ்வஸ்திகம்
Friday, April 06, 2012
சிலம்பும் குறளும்
சிலம்பும் குறளும்
”என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறதக் கேட்ட திருத்தகு நல்லீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்!”
என்று தமது சிலப்பதிகாரத்தை நிறைவு செய்யும் முன் இளங்கோவடிகள் உலகத்தாருக்கு அறவுரை வழங்குகிறார். அவை முழுமையும் சமண கருத்துக்கள் என்பதையாவரும் அறிவீர். ஆனாலும், நாம் கவனிக்காமல் விட்டக் கருத்து ஒன்றிருக்கிறது. அவற்றை ஈண்டுப் பார்ப்போம். மேலே வரும் அறவரிகளை மறுமுறை படியுங்கள். திருக்குறள் அதிகாரங்களை அவைகள் நினைவுப்படுத்துகின்றன அல்லவா?!
இதனால் இளங்கோவடிகள் திருக்குறளைப் படித்திருக்கிறார் என்று
கருதலாமா? படித்திருக்கலாம் என்றுதான் பல அறிஞர்கள்
கருதுகிறார்கள். யான் இக்கருத்தில் சற்றே மாறுபடுகிறேன்.
படித்திருக்கலாம். படிக்காமலும் இருக்கலாம். :-) படிக்காமல்
இருந்தால் அக்கருத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே?
எனின், எந்த சமயக் கருத்தையும் எந்த மொழியில் எழுதினாலும்,
அவை எந்த காலக்கட்டத்தில் எழுந்தாலும் அவைகள் ஒரே மாதிரிதான்
இருக்கமுடியும். காட்டாக, அருகனுக்கு “எண்குணன்” என்ற விளி
பண்டைய எல்லா மொழிகளிலும் (அர்தமகதி, கன்னட, சூரசேனி,
சங்கதம்) பயின்று வருவதைக் காணலாம்.
இதனால் மேலே சொன்ன இருபத்தைந்து கருத்துக்களும் எல்லா
சமண மொழி இலக்கியங்களிலும் வருவது கண் கூடு. இவைகள்
மற்ற சமயங்களிலும் வருகின்றனவே என்று கருதுவோர்க்கு, வருதல்
கூடுமெனினும், “Consistence” ஆக, சமணத்தில் மட்டுமே பயின்று
வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இரா.பானுகுமார்,
சென்னை
”என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறதக் கேட்ட திருத்தகு நல்லீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்!”
என்று தமது சிலப்பதிகாரத்தை நிறைவு செய்யும் முன் இளங்கோவடிகள் உலகத்தாருக்கு அறவுரை வழங்குகிறார். அவை முழுமையும் சமண கருத்துக்கள் என்பதையாவரும் அறிவீர். ஆனாலும், நாம் கவனிக்காமல் விட்டக் கருத்து ஒன்றிருக்கிறது. அவற்றை ஈண்டுப் பார்ப்போம். மேலே வரும் அறவரிகளை மறுமுறை படியுங்கள். திருக்குறள் அதிகாரங்களை அவைகள் நினைவுப்படுத்துகின்றன அல்லவா?!
இதனால் இளங்கோவடிகள் திருக்குறளைப் படித்திருக்கிறார் என்று
கருதலாமா? படித்திருக்கலாம் என்றுதான் பல அறிஞர்கள்
கருதுகிறார்கள். யான் இக்கருத்தில் சற்றே மாறுபடுகிறேன்.
படித்திருக்கலாம். படிக்காமலும் இருக்கலாம். :-) படிக்காமல்
இருந்தால் அக்கருத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே?
எனின், எந்த சமயக் கருத்தையும் எந்த மொழியில் எழுதினாலும்,
அவை எந்த காலக்கட்டத்தில் எழுந்தாலும் அவைகள் ஒரே மாதிரிதான்
இருக்கமுடியும். காட்டாக, அருகனுக்கு “எண்குணன்” என்ற விளி
பண்டைய எல்லா மொழிகளிலும் (அர்தமகதி, கன்னட, சூரசேனி,
சங்கதம்) பயின்று வருவதைக் காணலாம்.
இதனால் மேலே சொன்ன இருபத்தைந்து கருத்துக்களும் எல்லா
சமண மொழி இலக்கியங்களிலும் வருவது கண் கூடு. இவைகள்
மற்ற சமயங்களிலும் வருகின்றனவே என்று கருதுவோர்க்கு, வருதல்
கூடுமெனினும், “Consistence” ஆக, சமணத்தில் மட்டுமே பயின்று
வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இரா.பானுகுமார்,
சென்னை
Subscribe to:
Posts (Atom)